Thursday, March 1, 2018

19. கேரள யாத்திரை - 2

திருவித்துவக்கோடு 
22.01.18 - இரண்டாம் நாள் 
அதிகாலை பாலக்காட்டிலிருந்து கிளம்பி திருவித்துவக்கோடு ஆலயத்துக்குச் சென்றோம். பாராதப் புழா நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த அற்புதமான திவ்ய தேசத்தை அதிகாலையில் தரிசனம் செய்தது  மனதுக்கு அமைதியையும், பரவசத்தையும் ஊட்டுவதாக இருந்தது.

இங்கிருந்து கிளம்பி திருச்சூர் அருகில் உள்ள வடக்குநாதன்  கோவில் என்னும் சிவாலயத்துக்குச் சென்றோம். நந்திதேவரால் நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கோவிலில் சிவபெருமான் மலை வடிவில் இருக்கிறார். விடைக்குன்று நாதன் என்ற பெயர் மருவி வடக்குநாதன் என்று ஆகி விட்டதாகக் கருதப்படுகிறது. இந்த ஆலயம் பற்றி எங்கள் வழிகாட்டி தஞ்சாவூர் ரமேஷ் அவர்களின் விளக்கவுரையைக் கீழே காணலாம்.

இதன் பிறகு நாங்கள் சென்றது கடம்புழா பகவதி கோவிலுக்கு. கோவில் தரைமட்டத்துக்குச் சற்று கீழே அமைந்துள்ளது. கோவில் உள்ளே ஒரு காலிப் பையை கூட எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை.

அடுத்து நாங்கள் சென்றது திருநாவாய் திவ்யதேசத்துக்கு. பாரதப்புழா நதியின் இன்னொரு கரையில் அமைந்துள்ள இந்த திவ்யதேசப் பெருமாள் நாவாய் முகுந்தனின் அற்புத சேவை கிடைக்கப் பெற்றோம். கேரள திவ்யதேசங்களில் தாயாருக்கென்று தனி சந்நிதி உள்ள ஒரே கோயில் இதுதான். 

திருநாவாய்




மாலையில் குருவாயூரப்பன் ஆலய தரிசனம். இந்தக் கோவிலுக்குள் கைபேசி , ஒலி எழுப்பும் கைக்கடிகாரம் ஆகியவற்றைக் கண்டிப்பாக அனுமதிப்பதில்லை. பெரிய ஆலயம். ஆனால் கர்ப்பக்கிருகத்தில் குருவாயூரப்பன் மிகச் சிறிய வடிவில் சேவை சாதிக்கிறார். கர்ப்பக்கிருகத்துக்கு வெளியே நின்று பார்க்கும்போது பெருமாளின் திருவுருவம் கர்ப்பக்கிருக இருட்டில்  தீபங்களின் ஒளியில் ஓரளவுதான் கண்ணுக்குப் புலப்படுகிறது. .

தரிசனத்துக்காக வரிசையில் நின்றபோது உற்சவரை யானை மீது வைத்து கோவில் பிரகாரத்துக்குள்ளேயே அழைத்து வந்த அரிய காட்சியைக் காண முடிந்தது. மூலவரே மிகச் சிறிய .வடிவத்தில் இருக்கும்போது அதைவிடச் சிறிய உற்சவ மூர்த்தியைத் துணியால் மூடி யானை மீது வைத்து எடுத்துச் சென்றார்கள்.

இந்தக் கோவில் பற்றித் தஞ்சாவூர் ரமேஷ் அவர்களின் தொகுப்புரையைக் கீழே உள்ள இரண்டு வீடியோக்களில் காணலாம். 



குருவாயூர் கோவிலில் தரிசனம் செய்த பிறகு அருகில் உள்ள மம்மியூர் சிவன் கோவிலையும் தரிசித்தால்தான் தரிசனம் பூர்த்தியாகும் என்று குருவாயூர் கோயிலுக்குள்ளேயே எழுதப்பட்டுள்ளது. இந்தக் கோவில் குருவாயூரப்பன் கோவிலிலிருந்து சிறிது தூரத்தில்தான் உள்ளது. மம்மியூர் சிவன் கோவிலிலும் தரிசனம் செய்து கொண்டோம். இது சிவா-விஷ்ணு கோவில் போல் இரட்டைக்கோயிலாக அமைந்துள்ளது. சிவன் கோவிலை ஒட்டியே விஷ்ணு கோயிலும் அமைந்துள்ளது. 

குருவாயூரில் ஒரு வெங்கடாசலபதி ஆலயமும் அமைந்துள்ளது.;ரயில் நிலையத்துக்கு மறுபுறம் அமைந்துள்ள இந்தக் கோவிலில் திருப்பதி வெங்கடாசலபதியின் விக்கிரகம் போன்ற தோற்றத்தில் விக்கிரகம் அமைந்துள்ளது. இது குருவாயூர் கோவிலிலிருந்து நன்கு அல்லது ஐந்து கிலோமீட்டர்கள் தள்ளி உள்ளது.

இரவில் குருவாயூரிலேயே தங்கினோம்.
இரண்டாம் நாள் யாத்திரை இத்துடன் நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment